கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில், கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், இன்று (24.6.2026) சென்னை, தியாகராய நகர், கோபதி நாராயணா சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விரிவான சுருக்கம்
செய்தி வெளியீடு எண்: 275, நாள்: 24.06.2026 அன்று வெளியான இந்த அறிவிப்பில், கவியரசு கண்ணதாசனின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கவியரசு கண்ணதாசன் அவர்கள் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் 24.6.1927 அன்று சாத்தப்பன்-விசாலாட்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் முத்தையா. சிறுகூடல்பட்டி பள்ளியில் ஆரம்பக் கல்வியும், அமராவதி புதூரில் பள்ளிப் படிப்பையும் பயின்றார். தனது இளமைப் பருவத்தில் எழுத்தாற்றலில் மிகுந்த ஆர்வமும், புத்தகங்களை வாசிப்பதில் அதிக நாட்டமும் கொண்டிருந்தார். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். கம்பராமாயணம் மற்றும் பாரதியாரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கவிதைகள், இலக்கியம், சிறுகதைகள், நாடகங்கள் போன்றவற்றில் தனித்தன்மையோடு சிறந்து விளங்கினார். திருமகள், திரைஒலி, மேதாவி, சண்டமாருதம், தென்றல், கண்ணதாசன் மாத இதழ், கடிதம் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்துள்ளார். மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி, கவிதாஞ்சலி, தைப்பாவை, பாண்டிமாதேவி ஆகியவை கவியரசு கண்ணதாசன் படைத்த மிகச் சிறந்த காவியங்களாகும். மேலும் 20க்கும் மேற்பட்ட நவீனங்கள் மற்றும் கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்புகள் மற்றும் அனார்கலி, சிவகங்கைச்சீமை, ராஜதண்டனை, அருணோதயம் ஆகிய நாடகங்களையும் எழுதினார். அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம் ஆகியவை அவரின் மிகச் சிறந்த படைப்புகளாகும். அவரின் 'அழகி' என்னும் கவிதை ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். 'கன்னியின் காதலி' திரைப்படத்திற்கு முதற்பாடலை எழுதினார். 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனமும், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார். 1970 ஆம் ஆண்டு ஒன்றிய, மாநில அரசுகளின் சிறந்த பாடலாசிரியர் விருதுகளையும், 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞராகவும், 1979ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதையும் பெற்றார். அவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜூன் 24ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையிலும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள மணிமண்டபத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி. பிரபாகர், மாண்புமிகு அமைச்சர்களான திரு. என்.ஆனந்த், திரு. ப.வெங்கடரமணன், திரு. நெ. மரிய வில்சன், முனைவர். ரா.குமார், சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தியாகராஜன், செயலாளர் (பொ) திரு.வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., மற்றும் இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1கவியரசு கண்ணதாசன் அவர்களின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்.
- 2கவியரசு கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜூன் 24ஆம் நாள் சென்னை மற்றும் காரைக்குடியில் உள்ள மணிமண்டபத்திலும் தமிழ்நாடு அரசால் சிறப்பாக கொண்டாடப்படும்.